பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெவெட் கூப்பர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சமீப காலங்களில் இந்தியா-பிரிட்டன் இடையேயான கூட்டுறவு வலுவடைந்து வருவதைப் பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் மகத்தான வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா-பிரிட்டன் தொலைநோக்கு பார்வை 2035 இரு நாடுகளுக்கு இடையேயான உறவைத் தொடர்ந்து வழிநடத்தும் என்றும், உலகின் நன்மைக்கான கூட்டு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பரை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சமீப காலங்களில் இந்தியா-பிரிட்டன் இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வருவதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன். இத்தகைய நெருக்கமான இருதரப்பு உறவானது, இரு நாடுகளுக்கும் மகத்தான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளித்துள்ளது. இரு நாடுகளின் கூட்டுத் தொலைநோக்குத் திட்டமான இந்தியா – பிரிட்டன் பார்வை 2035 நமது கூட்டாண்மையைச் சிறந்த முறையில் தொடர்ந்து வழிநடத்தும். உலகின் நன்மைக்கான நமது கூட்டு முயற்சிகளை இது மேலும் வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.





