இந்தியாவின் விவசாய உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், கர்நாடகாவிலிருந்து நியூசிலாந்திற்கு முதன்முறையாக மூலிகைகள் கலந்த, சமைக்கத் தயாரான சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் கடல்வழி ஏற்றுமதியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி முகமை (அபெடா) நேற்று (ஜூன் 3, 2026) வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தது. பெங்களூரைச் சேர்ந்த இன்ஃபினி அக்ரோடெக் நிறுவனம் அனுப்பிய ஒரு மெட்ரிக் டன் எடையுள்ள இந்தப் பொருட்களை, அபெடா தலைவர் திரு அபிஷேக் தேவ் காணொலிக் காட்சி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் ‘ஸ்ரீ அன்னம்’ திட்டத்தின் சிறுதானிய ஊக்குவிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்றுமதி அமைந்துள்ளது. உலக உணவு இந்தியா போன்ற சர்வதேசக் கண்காட்சிகளில் பங்கேற்றதன் மூலம் இந்த வணிக வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதுடன், இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண் ஏற்றுமதி கட்டமைப்பை சர்வதேச அளவில் வலுப்படுத்தும்.





